கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் சம்மன்


கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் சம்மன்
x

கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூரு

மேகதாதுவில் அணை கட்ட கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி 2 கட்டமாக பாதயாத்திரை மேற்கொண்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பாதயாத்திரையை நடத்தினர். இதையடுத்து ராமநகர் போலீசார் சித்தராமையா, டி.கே, .சிவக்குமார் உள்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.


இது தொடர்பான விசாரணை பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட தொடர்புடைய அனைவரும் 24-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பாடி இந்த வழக்கு நேற்று அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட 20 பேர் நேரில் ஆஜராகவில்லை. டி.கே.சுரேஷ் எம்.பி. உள்பட 9 பேர் நேரில் ஆஜராயினர்.


அவர்களுக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரது சார்பில் ஆஜரான வக்கீல்கள், தங்கள் தரப்பினருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட சிறப்பு கோர்ட்டு, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட வழக்கில் தொடர்புடைய 20 பேரும் வருகிற 15-ந் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.


Next Story