சர்ஜிகல் ஸ்டிரைக்: ராணுவம் நிரூபிக்க தேவை இல்லை; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி


சர்ஜிகல் ஸ்டிரைக்:  ராணுவம் நிரூபிக்க தேவை இல்லை; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி
x

சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி ராணுவம் நிரூபிக்க தேவையில்லை என திக்விஜய் சிங்கின் சர்ச்சை பேச்சுக்கு ராகுல் காந்தி பதில் அளித்து உள்ளார்.


ஜம்மு,


ஜம்மு-காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அதே ஆண்டின் செப்டம்பர் 28-ந்தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியது என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் நேற்று நடைபெற்றபோது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய திக்விஜய் சிங், காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சர்ஜிகல் தாக்குதல் நடத்தினோம் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரம் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. பா.ஜ.க. அரசு அடுக்கடுக்கான பொய்களை மட்டுமே கூறி ஆட்சி செய்து வருகிறது என்று கூறினார்.

சர்ஜிகல் தாக்குதல் பற்றி அவர் சந்தேகம் கிளப்பியது பல்வேறு வகையிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அவர் சான்று கேட்பது இந்திய வீரர்களை அவமதிக்கும் மற்றும் கொச்சை படுத்தும் விவகாரம் ஆகும் என பா.ஜ.க. மட்டத்தில் எதிர்ப்பு குரல் எழும்பியது.

இந்நிலையில், இதுபற்றி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, திக்விஜய் சிங்கின் தனிப்பட்ட பார்வைகளை நாங்கள் ஏற்று கொள்ளவில்லை. அவரது கருத்துகள் ஒதுக்கப்பட வேண்டியவை.

ராணுவ வீரர்கள் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர் என்பதில் நாங்கள் முழு அளவில் தெளிவாக இருக்கிறோம். அதற்கு வீரர்கள் சான்றளிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறினார். சர்ச்சையை தொடர்ந்து, இன்றைய நிருபர்கள் கூட்டத்தில் திக்விஜய் சிங் கலந்து கொள்ளவில்லை.



Next Story