டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்தது3 கி.மீ. தூரம் கடந்துசென்று உடலை சாலையோரம் வீசிய கொடுமை


டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்தது3 கி.மீ. தூரம் கடந்துசென்று உடலை சாலையோரம் வீசிய கொடுமை
x
தினத்தந்தி 3 May 2023 10:15 PM GMT (Updated: 3 May 2023 10:15 PM GMT)

டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்தது. அந்த உடலை சுமார் 3 கி.மீ. தூரம் கொண்டு சென்று ரோட்டோரம் வீசியவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லியில் விபத்தில் பலியானவரின் உடல் காரின் மேற்கூரையில் விழுந்தது. அந்த உடலை சுமார் 3 கி.மீ. தூரம் கொண்டு சென்று ரோட்டோரம் வீசியவர்களை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் வித்தியாசமான பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. விபத்து சம்பவங்கள்கூட அதிர்ச்சியூட்டுவதாக அமைந்து விடுகின்றன. கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் காரில் பல கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டதில் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு காரின் முன்பக்கத்தில் ஒருவரை தொங்கவிட்டு உயிர்பயம் காட்டிய சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில் தற்போது அதே வகையிலான மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

டெல்லி கன்னாட்பிளேசை ஒட்டியுள்ள கஸ்தூரிபா காந்தி ரோடு சந்திப்பில் நள்ளிரவு நேரத்தில் ஒரு விபத்து நடந்தது. அதாவது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பைக்கில் வந்த ஒருவர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர், விபத்தை ஏற்படுத்திய காரின் மேற்கூரையில் விழுந்தார். அவர் இறந்து விட்டார்.

விபத்தை ஏற்படுத்திய கார் அங்கு நிற்கவில்லை. வேகமாக அங்கிருந்து சென்றது. இதை முகமது பிலால் என்பவர் கவனித்தார். அவர் தனது ஸ்கூட்டரில் அந்த காரை பின்தொடர்ந்தார். சத்தம்போட்டு அலறி காரை நிற்க சொன்னார். ஆனால் கார் நிற்கவில்லை. இதனால் அவர் காரின் மேற்கூரையில் விபத்தில் பலியானவரின் உடலோடு சேர்த்து வீடியோ படம் எடுத்தார்.

இதற்கிடையே, கார் சுமார் 3 கி.மீ. தூரம் கடந்து இந்தியா கேட் அருகே சென்றுவிட்டது. அங்கு ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் சாலையோரம், உடலை தூக்கி வீசிவிட்டு காரில் இருந்தவர்கள் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் துரித விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் பலியானது டெல்லியைச் சேர்ந்த தீபன்சு வர்மா (வயது 30) என்பதும், அவரோடு சென்று விபத்தில் காயம் அடைந்தவர் அவருடைய உறவினர் முகுல் என்பதும் தெரியவந்தது. முகுல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதுடன், இறந்த உடலை தூக்கி வீசியது ஹர்னீத் சாவ்லா மற்றும் அவருடைய குடும்பத்தினர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story