குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: தமிழக பூ வியாபாரி பாட்டிலால் தாக்கி கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: தமிழக பூ வியாபாரி பாட்டிலால் தாக்கி கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பெங்களூருவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தமிழ்நாட்டை சேர்ந்த பூ வியாபாரி பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். தலைமறைவான நண்பர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறாா்கள்.

பெங்களூரு:

தமிழக வியாபாரி கொலை

பெங்களூரு பனசங்கரி அருகே கதிரேனஹள்ளியில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 30). இவர், சிட்டி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர அவர் வெல்டிங் வேலைக்கும் சென்று வந்தார். பிரசாந்தின் சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் சிட்டி மார்க்கெட்டில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரசாந்த் மதுஅருந்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில், குடிபோதையில் பிரசாந்திற்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த நண்பா்கள் மதுபாட்டிலால் பிரசாந்தின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. மேலும் அங்கு கிடந்த மரப்பெட்டியாலும் பிரசாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த ரத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்...

உடனே அங்கிருந்து பிரசாந்தின் நண்பர்கள் ஓடிவிட்டார்கள். நேற்று அதிகாலையில் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு வியாபாாிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிட்டி மார்க்கெட் போலீசார் விரைந்து வந்து பிரசாந்த் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நண்பர்களுடன் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட பிரசாந்தின் நண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பிரசாந்த் கொலை தொடர்பாக ஒரு சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story