அரசு பஸ் மோதி வாலிபர் பலி


அரசு பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

நஞ்சன்கூடுவில் சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

மைசூரு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு (தாலுகா) டவுன் ஈக்தா மைதானம் பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது28). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முபாரக் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலை ஜே.எஸ்.எஸ் பாலிடெக்னிக் முன்பு அவர் நடந்து சென்றார்.

முபாரக் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த நஞ்சன்கூடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் முபாரக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story