ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில்: ஜூன் 8-ந் தேதி கும்பாபிஷேகம்


ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில்: ஜூன் 8-ந் தேதி கும்பாபிஷேகம்
x

ஜம்முவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஜம்மு,

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பல ஊர்களிலும் சீனிவாச திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

அந்த வகையில் ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேசுவரம் ஆகிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மும்பை, ராய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்முவில் மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமையும். இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. திருமலையில் நடப்பது போலவே அனைத்து சடங்குகள், பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் இந்த புதிய கோவிலிலும் நடத்தப்படும்.

கோவிலுடன் சேர்த்து உப தெய்வங்களின் சன்னதிகள், மடப்பள்ளி, அன்னபிரசாத கவுண்ட்டர்களும் கட்டப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி அங்குரார்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் ஜூன் 4-ந் தேதி முதல் தொடங்கும். ஜூன் 8-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


Next Story