ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார்


ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது:  துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார்
x

ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.

இதன்பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதேபோன்று மற்றொரு நிகழ்வில் பேசும்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் மைக்ரோபோன்கள் அணைத்து வைக்கப்பட்டு விடும். அதனால், அவர்கள் பேச முடியாதபடி செய்யப்படும் என்று கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் இன்று பேசினார். சவுத்ரி சரண் சிங் பல்கலை கழகத்தில் நடந்த ஆயுர்வேத மஹாகும்பம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, அதுபோன்ற விசயங்கள் நெருக்கடி நிலை காலத்திலேயே செய்யப்பட்டன. ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. அது ஒரு கருப்பு அத்தியாயம் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதனை சுட்டி காட்டி தன்கார் பேசினார்.

தொடர்ந்து அவர், சில மனிதர்கள் தங்களது குறுகிய பார்வையால் நாட்டின் சாதனைகளை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார். ஜனநாயக மதிப்புகள் மிக முக்கியம் வாய்ந்தது. ஜனநாயகத்தின் அன்னையாக நாம் இருக்கும்போது, ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என அவர் பேசியுள்ளார்.


Next Story