பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் பற்றி துப்பு கிடைத்தது


பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் பற்றி துப்பு கிடைத்தது
x

பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

5 பயங்கரவாதிகள்

பெங்களூருவில் பயங்கரவாதிகள் சிலர், நாச வேலையில் ஈடுபட்ட திட்டமிட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரு போலீசாரை எச்சரித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதன்பேரில் சுல்தான்பாளையா, கனகநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 5 பயங்கரவாதிகளை கைது செய்தனர்.

அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சையது சுகைல், உமர், ஜாகித், முடாசீர் மற்றும் பைசல் ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராக இருந்ததும் தெரிந்தது.

கொலை வழக்கில்...

அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது 12 செல்போன்கள், 45 தோட்டாக்கள், 7 கைத்துப்பாக்கிகள், வாக்கி-டாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை பெங்களூரு என்.ஐ.ஏ. கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்கள் 5 பேருக்கும் பயங்கரவாதி நசீர், ஜுனைத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிடிக்க தீவிரம்

அவர்களது அறிவுரையின்படி ஜாமீனில் வெளிவந்தவுடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராகியது தெரிந்தது. தற்போது ஜுனைத் வெளிநாட்டில் உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை சப்ளை செய்தவர்கள் குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.

யஷ்வந்தபுரம் மற்றும் டி-பேகூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பயங்கரவாதிகள் 5 பேருக்கும் ஆயுதங்கள் சப்ளை செய்தவர்கள் குறித்து துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விரைவில் அவர்களை போலீசார் கைது செய்வார்கள் என கூறப்படுகிறது.


Next Story