ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 40 மணி நேரதிற்கும் மேலாக தொடரும் மீட்பு போராட்டம்..!


ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: 40 மணி நேரதிற்கும் மேலாக தொடரும் மீட்பு போராட்டம்..!
x

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு. இந்த சிறுவன் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

சிறுவனின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் 40 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்ஜிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணித்து வருகின்றனர். மேலும், சிறுவனுக்கு ஜூஸ், பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் சிறிய வாளியின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறுவன் மன உறுதியுடன் இருப்பது அவன் உயிரோடு இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது கிணற்றுக்குள் சிறுவன் இருக்கும் பகுதியில் தொடர்ந்து நீர் சுரந்துகொண்டே இருக்கிறது. இதனால் சிறுவன் இருக்கும் பகுதியில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. சிறிய வாளியின் மூலம் தண்ணீரை சிறுவன் சேகரித்து மேலே அனுப்பும் காட்சிகள் வெளியானது.

இதற்கிடையே, குஜராத்தில் இருந்து மீட்பு ரோபோ ஒன்று வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டுவிடுவான் என்ற நம்பிக்கையை நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.


Next Story