புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

புதுடெல்லி, டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து, கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அதற்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைந்து உள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, இந்த நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும். எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை பொது செயலாளர் உத்பல் குமார் சிங், இந்த அழைப்பிதழை எம்.பி.க்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்ஹா அமர்வு நாளை விசாரிக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத 25 கட்சிகள் பங்கேற்க உள்ளன.


Next Story