பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி கேட்டவருக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் கொடூரம்


பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி கேட்டவருக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் கொடூரம்
x
தினத்தந்தி 12 Sep 2023 10:27 AM GMT (Updated: 12 Sep 2023 4:26 PM GMT)

ஆந்திர பிரதேசத்தில் ஓட்டலில் வாங்கிய பிரியாணிக்கு கூடுதலாக தயிர் பச்சடி தரும்படி கேட்டது மோதலில் கொண்டு சென்று விட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் ஐதராபாத் நகரில் பஞ்சகட்டா பகுதியில் ஓட்டல் ஒன்றில் லியாகத் (வயது 30) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சென்று பிரியாணி வாங்கியுள்ளார். அப்போது, ஓட்டல் ஊழியர்களிடம் கூடுதலாக தயிர் பச்சடி தரும்படி கேட்டு உள்ளார்.

இதில், ஏற்பட்ட மோதலில் லியாகத் கடுமையாக தாக்கப்பட்டு, உயிரிழந்து விட்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, லியாகத் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரியாணி வாங்க கடைக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் அப்போது குடிபோதையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், லியாகத் பிரியாணியை வாங்கி விட்டு, கூடுதலாக தயிர் பச்சடி கேட்டு, அது கிடைக்காதபோது, ஓட்டல் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால், அந்த பகுதியில் மோதல் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளனர். சி.சி.டி.வி. கேமிராவில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதன்பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதில், லியாகத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார். அவரை சுயநினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என அறிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story