உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு; ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம்


உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு; ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம்
x

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு என ஜி-20 உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உக்ரைனில் ஏற்பட்ட போரால் உலகளவில் உணவு தானியம், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நிதி ஸ்திரத்தன்மை, வளர்ச்சி உள்ளிட்டவற்றில் இந்த போரானது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இதன்படி, பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண்பதே இலக்கு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

புவிசார் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் தளமாக ஜி-20 அமைப்பு இல்லை எனவும் இந்த உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் கண்டனம் தெரிவித்து உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என ஜி-20 மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஜி-20 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலக பொருளாதார வளர்ச்சி, மேம்பாட்டுக்கான வழிகாட்டுதலை இந்த உச்சி மாநாடு வழங்கியுள்ளது. இதேபோன்று, சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காகவும் உறுப்பு நாடுகள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளன.


Next Story