உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மும்மத பிரார்த்தனையுடன் நாட்டுக்கு அர்ப்பணிப்பு


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மும்மத பிரார்த்தனையுடன் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மும்மத பிரார்த்தனையுடன் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.




ஜோத்பூர்,

முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனித்துவமான இலகுரக ஹெலிகாப்டரை இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று இலகுரக ஹெலிகாப்டரை விமானப்படையில் இணைத்தார். அதற்கு முன்னதாக இந்து, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மத முறைப்படி வழிபாட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- அளப்பெரிய ஆற்றலுடன் இலகுரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை காட்டுவதாகவும் தெரிவித்தார். உலகிலேயே மிகச்சிறந்த விமானப்படையாக இந்திய விமானப்படை மாறும் என்ற அவர், உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தி குறித்த பேச்சு எழும்போது, இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலை உருவாகும் என்றார்.

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.

இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம். இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.


Next Story