போராட்டத்தில் விவசாயி உயிரிழந்த விவகாரம்; கொலை வழக்கு பதிவு செய்ய விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தல்


போராட்டத்தில் விவசாயி உயிரிழந்த விவகாரம்; கொலை வழக்கு பதிவு செய்ய விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தல்
x

போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 21 வயதே ஆன சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.

சண்டிகர்,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கின.

ஆனால், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரு இடங்களிலும் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டிருந்தன. தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால், அந்த எல்லை பகுதிகளிலேயே விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி தங்கி விட்டனர்.

இதனிடையே போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கடந்த 8, 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 5-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே நேற்று டெல்லி நோக்கி மீண்டும் படையெடுக்கப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்தனர். விவசாயிகள் முன்னேறி வருவதை தடுக்க அரியானா, டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதில் படுகாயமடைந்த 3 விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 21 வயதே ஆன சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். மேலும் இந்த மோதலில் 12 காவலர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயி சுப்கரன் சிங்கின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சுமார் 30 டிராக்டர்களை சேதப்படுத்திய அரியானா துணை ராணுவப்படையினர் மீது பஞ்சாப் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story