விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டது


விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டது
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:45 PM GMT)

விண்வெளியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

செயலிழந்துவிட்டது

இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் பி.எஸ்.எல்.வி.-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக கோளப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அதன் செயல்பாடு நின்றுள்ளது. இதன் மூலம் மங்கள்யான் விண்கலம் விடை பெற்று கொண்டது. இது

குறித்து இஸ்ரோ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:-

மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் காலியாகிவிட்டது. அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுகுறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை. கிரகணம் காரணமாக அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. அடிக்கடி கிரகணங்கள் நிகழ்ந்தன. அதிலும் ஒரு கிரகணம் 7½ மணி நேரம் நீடித்தது.

திறன் குறைந்துவிடும்

அந்த விண்கலம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் கிரகணத்தை தாங்கும் வகையில் தான் பேட்டரி அமைக்கப்பட்டது. நீண்ட நேரம் கிரகணம் நீடித்தால் அதனால் பேட்டரி செயல்படும் திறன் குறைந்துவிடும். இந்த மங்கள்யான் விண்கலம் சுமார் 8 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. அது 6 மாதங்கள் வரை செயல்படும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டது.

அந்த விண்கலம் தனது சிறப்பான பணியை செய்துள்ளது. அறிவியல் பூர்வ தகவல்களை வழங்கியுள்ளது. தொழில்நுட்பம், வடிவமைப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விண்கலத்தில் 15 கிலோ எடை கொண்ட 5 அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டன.

வளிமண்டல பணிகள்

புவியியல் ஆய்வு, தாவரம், விலங்குகள் குறித்த ஆய்வு, வளிமண்டல பணிகள், புவி வெப்பம், வளிமண்டல தப்பிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கருவிகளில் வண்ண கேமரா, தெர்மர் இன்பேர்டு படங்கள் ஸ்பெக்ட்ரோமீட்டர், மீத்தேன் சென்சார், மார்ஸ் எக்சாஸ்பெரிக் நியூட்ரல் காம்போசின் அனலைசர், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் போன்ற கருவிகள் அந்த விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாறு கூறப்பட்டன.

இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு மங்கள்யானுக்கு அடுத்த விண்கலத்தை அனுப்புவது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. ககன்யான், சந்திரயான்-3, ஆதித்யா போன்ற விண்கலங்களை உருவாக்குவதில் இஸ்ரோ கவனம் செலுத்தியுள்ளது.

திட்ட அறிக்கை

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'மங்கள்யானுக்கு புதிய விண்கலத்தை அனுப்புவது குறித்த ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்களில் இது இடம் பெறவில்லை. ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க வேண்டும். அதுகுறித்த திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. இதற்கு சர்வதேச ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது' என்றனர்.


Next Story