எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம்: பெங்களூருவில் ஜூலை 17, 18ம் தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு!


எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம்:  பெங்களூருவில் ஜூலை 17, 18ம் தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு!
x
தினத்தந்தி 3 July 2023 8:33 AM GMT (Updated: 3 July 2023 9:55 AM GMT)

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். பெங்களூருவில் நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பெங்களூருவில் கூட்டம் நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்பட்ட நிலையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தை நடக்கும் மாற்ற திமுக வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஜூன் 13-ல் பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சியாக 2-வது கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story