அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர்


அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர்
x

உத்தர பிரதேசத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி வருகிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரெயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.

ரூ.1,450 கோடி செலவில் அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விமான நிலையத்துக்கு ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 'அயோத்தி கோவில் சந்திப்பு' என்ற பெயருடன் ரூ.240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இதைதொடர்ந்து ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 2 அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story