மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி


மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி
x

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளன.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story