வேனை கவிழ்த்த காட்டுயானை; 3 பேர் படுகாயம்


வேனை கவிழ்த்த காட்டுயானை; 3 பேர் படுகாயம்
x

மூடிகெரே அருகே வனப்பகுதி சாலையில் சென்ற வேனை, காட்டுயானை தாக்கி கவிழ்த்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்கமகளூரு;

ஆம்னி வேன்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் தேவரமனே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி சாலை மற்றும் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தும், வாகனங்களை வழிமறிந்து தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த சாலை வழியாக ஆம்னி வேன் ஒன்று வந்துள்ளது.

அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டுயானை சாலைக்கு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து டிரைவர், வேனை பின்னோக்கி இயக்க முயன்றுள்ளார். அப்போது காட்டு யானை, வேனை தாக்க துரத்தி வந்தது. அதன்படி காட்டு யானை, வேனை மடக்கி பிடித்து தாக்கியது. இதில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர் காட்டுயானை, வேனை சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்த்தது.

3 பேர் படுகாயம்

மேலும் வேனில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டனர். பின்னர், அவர்கள் வேனின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பனகல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் பனகல் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கும் நோில் சென்று பார்வையிட்டனர்.

வாகன ஓட்டிகள் கோரிக்கை

இதையடுத்து அங்கு நின்ற வாகன ஓட்டிகள், வனத்துறையினரிடம் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி சாலைக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்ற வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Next Story