நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேச்சு
x
தினத்தந்தி 18 Sep 2023 8:57 AM GMT (Updated: 18 Sep 2023 4:27 PM GMT)

நிதி நெருக்கடியிலும் மிகுந்த பொருட்செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:-

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எந்த சிறப்பும் இல்லை. தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம் தான் இது. நிதி நெருக்கடியிலும் மிகுந்த பொருட்செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பணம் செலவழித்து கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏன் முந்தைய கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை?.

75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் திமுக உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மாநிலங்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா குரல் கொடுத்தார். வாஜ்பாயின் நெருங்கிய நண்பராக அண்ணா திகழ்ந்தார்.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வி.பி.சிங் சிறப்பாக பங்காற்றி உள்ளார். நேரு, நரசிம்மராவ், வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களும் நாட்டிற்காக சிறப்பாக பணியாற்றினர். ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, மணிப்பூர் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story