இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை : நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி


இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை : நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி
x

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என நொய்டா நகர தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி பேட்டி அளித்துள்ளார்.

நொய்டா,

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும் உள்ளன. இந்நிலையில், இந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்தாண்டு கட்டடங்களை வெடி வைத்து தகர்க்க சுப்ரீம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி 28-ம் தேதி (இன்று) மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்படவுள்ளன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் 'டிரோன்கள்' பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை இடிப்பதற்காக சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கட்டிடங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்ட சில வினாடிகளில் தரைமட்டமாகியது. கட்டிட இடிபாடுகளால் எழுந்த புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் போல துசுபடலமாக காட்சியளித்தது.

இந்த நிலையில் இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என நொய்டா தலைமை நொய்டா நகர தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.இடிக்கப்பட்ட கட்டடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மாலை 6.30 மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படுவர்.துப்புரவு பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார்.


Next Story