ராமர் கோவில் திறப்பு விழா; ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்


ராமர் கோவில் திறப்பு விழா; ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
x

அயோத்தியில் நடைபெற இருப்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி என்று ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

கோஹிமா,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பை நிராகரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது.

இதனிடையே மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க.வின் அரசியல் நிகழ்வு என்று விமர்சித்தார். மேலும் வளர்ச்சி திட்டங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பா.ஜ.க.வினர் தேர்தல் சாயம் பூசி வருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஜனவரி 22-ந்தேதி நடைபெற இருப்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி. இது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் திட்டம். இது தர்மத்தை தவறாக பயன்படுத்துவதாகும்" என்று தெரிவித்தார்.


Next Story