பத்ராவதி அருகே மாயமானதாக தேடப்பட்டவர்கள் கால்வாயில் தந்தை-மகன் பிணமாக மீட்பு


பத்ராவதி அருகே மாயமானதாக தேடப்பட்டவர்கள் கால்வாயில் தந்தை-மகன் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

பத்ராவதி அருகே வீட்டில் இருந்து மாயமானதாக தேடப்பட்ட நிலையில் கால்வாயில் தந்தை-மகன் பிணமாக மீட்கப்பட்டனர். தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவமொக்கா;

தந்தை-மகன் மாயம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா மாவினகெரே காலனி பகுதியை சோ்ந்தவர் முகமது ஆஸம் (வயது 67). இவரது மகன் முகமது சனாவுல்லா(22). இதில் சனாவுல்லா மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் அந்த பகுதியில் தேடிபாா்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் உடனே ஒசமனே போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகனை தேடிவந்தனர்.

கால்வாயில் பிணமாக மீட்பு

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சித்தாபுரா பகுதியில் ஓடும் பத்ரா கால்வாயில் ஆண் பிணம் மிதப்பதை பாா்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் போில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் மாயமானதாக தேடிவந்த முகமது ஆஸம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது மகனின் உடலையும் ஆற்றில் தேடிபார்த்தனர். அப்போது ஆஸம் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சனாவுல்லாவின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை-மகன் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கால்வாயில் தவறி விழுந்தனரா என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு உடல்கள் கால்வாயில் வீசப்பட்டதா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து ஒசமனே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story