பண்ட்வால் அருகே சோகம்; காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி


பண்ட்வால் அருகே சோகம்; காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
x

பண்ட்வால் அருகே காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியான சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு;

சிறுமிக்கு காய்ச்சல்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி ஆசார்யா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 6 வயதில் ஆராத்யா ஆசார்யா என்ற மகள் இருந்தாள். சிறுமி ஆராத்யா அதேப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவளை, பெற்றோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ரவி அதேப்பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக மகளை சேர்த்தார்.

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் டாக்டர்கள், சிறுமிக்கு தீவிர சிகிக்சை அளித்து வந்தனர்.

பலி

இந்த நிலையில் சிறுமி ஆராத்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ட்வால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிறுமி எந்த காய்ச்சலால் பாதித்து உயிரிழந்தாள் என்று உடனடியாக தெரியவில்லை. டெங்கு காய்ச்சல் பாதித்து சிறுமி உயிரிழந்தாளா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமி ஆராத்யா உயிரிழந்ததை அறிந்து அவள் படித்த பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story