வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி; சித்தப்பா உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி; சித்தப்பா உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x

நிலத்தகராறில் தாக்கியதால் வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற சித்தப்பா உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்கமகளூரு;

நிலத்தகராறு

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா நாகராலு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது தம்பி நஞ்சுண்டா. இவர்கள் இருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. மஞ்சுநாத்தின் வீட்டுக்கு செல்லும் வழியில் நஞ்சுண்டாவின் நிலம் உள்ளது. இந்த நிலையில் மஞ்சுநாத் வீட்டுக்கு செல்லும் வழியை மறித்து நஞ்சுண்டா வேலி அமைத்துள்ளார்.

இதனால் மஞ்சுநாத் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதுதொடர்பாக மஞ்சுநாத்தின் மகன் லட்சுமேஷா (வயது 24), சித்தப்பா நஞ்சுண்டாவிடம் சென்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

அரிவாள் வெட்டு

இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது லட்சுமேஷா, தனது சித்தப்பா நஞ்சுண்டாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதையடுத்து லட்சுமேஷா அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் அண்ணன் மகன் லட்சுமேஷாவை தீர்த்தக்கட்ட நஞ்சுண்டா முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நண்பர்களான அபிலாஷ், மகாதேவப்பாவுடன் சேர்ந்து நேற்று முன்தினம் லட்சுமேஷாவிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமேஷா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள், லட்சுமேஷாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் சக்கராயப்பட்டணா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நஞ்சுண்டா மற்றும் அவரது நண்பர்கள் அபிலாஷ், மகாதேவப்பா ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story