நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை


நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு ஒத்திகை
x

கோப்புப்படம்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலை திடீரென மாறி உள்ளது. சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆயிரம், 2 ஆயிரம் என ஆஸ்பத்திரி சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நோயின் தீவிர தாக்குதலோ, குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகளோ நேரவில்லை என்பது ஆறுதலான விஷயம்.

காரணம் என்ன?

தொற்று பரவல் அதிகரித்து இருப்பதற்கு காரணம் உருமாறிய புதிய வகை கொரோனாவான எக்ஸ்பிபி.1.16 வைரஸ்கள்தான் என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வைரஸ் பாதிப்பு 21.6 சதவீதமாக இருந்தது. அது மார்ச் மாதத்தில் 35.8 சதவீதமாக அதிகரித்தது.

இருப்பினும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநிலங்களுடன் ஆலோசனை

கடந்த 7-ந் தேதி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு தயார் நிலை குறித்து, மாநில சுகாதார மந்திரிகள் மாவட்ட நிர்வாகங்களுடனும், சுகாதார அதிகாரிகளுடனும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனைகளை அதிகரிப்பதுடன், உறுதி செய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக அதற்கான பிரத்யேக பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா கால கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டியதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

எக்ஸ்பிபி.1.5 மற்றும் 6 வகையான உருமாறிய வைரஸ்களை உலக சுகாதார நிறுவனம் தற்போது உன்னிப்பாக கண்காணித்து ஆராய்வதாகவும் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

தயார் நிலை ஒத்திகை

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார்நிலையை சோதித்து அறிவதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இன்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, அரியானா மாநிலம், ஜாஜாரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியின் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகையை பார்வையிடுகிறார்.

இதே போன்று நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதார மந்திரிகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு தயார் நிலை ஒத்திகையை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.


Next Story