ஜார்க்கண்ட்: நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை - 2 பேர் பலி


ஜார்க்கண்ட்: நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை - 2 பேர் பலி
x

ஜார்க்கண்டில் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் அக்கட்சி நீக்கியது.

இதற்கிடையில், மத கடவுளின் இறை தூதரை அவமதித்ததாக கூறியும் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்த கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் நேற்று மதியம் மத வழிபாட்டிற்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர். ஒருசில பகுதிகளில் வன்முறையாளர் சாலைகளை மறித்தும், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.

அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, வன்முறையாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், ராஞ்சியில் நடந்த வன்முறையின் போது பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், வன்முறையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.


Next Story