குட்டையில் மூழ்கி இரண்டு பேர் சாவு


குட்டையில் மூழ்கி  இரண்டு பேர் சாவு
x
தினத்தந்தி 30 Jun 2023 9:48 PM GMT (Updated: 30 Jun 2023 9:48 PM GMT)

குட்டையில் கால்தவறி விழுந்த சிறுவனை மீட்க சென்றபோது, தந்தை, தாத்தா நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் தங்கவயல்:-

குட்டையில் விழுந்த சிறுவன்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா அங்காலமடகு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடரெட்டி (வயது 70)். இவரது மகன் சவுடாரெட்டி (45). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் விவசாய தேவைக்காக குட்டை ஒன்று தோண்டி வைத்திருந்தனர். அதில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சவுடா ரெட்டி தனது மகன் சஞ்சய் (14) தோட்டத்திற்கு அழைத்து சென்றிருந்தார். அப்போது சிறுவன் குட்டையின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக நீரில் தவறி விழுந்தார். இதை பார்த்த வெங்கடரெட்டி மற்றும் அவரது மகன் சவுடா ரெட்டி, குட்டையில் குதித்து சிறுவனை மீட்டு, வெளியே அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களால் குட்டையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

தந்தை, தாத்தா சாவு

நீரில் மூழ்கிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த சிறுவன் கூச்சலிட்டு கதறி அழுதான். இதைக்கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனே சிந்தாமணி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குட்டையில் குதித்து, 2 பேரின் உடலையும் கைப்பற்றினர்.

இதையடுத்து அவர்களின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் குட்டையில் அதிகளவு சகதி இருந்ததால் அதில் சிக்கி 2 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிந்தாமணி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story