கோலாரில் தினமும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை


கோலாரில் தினமும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

கோலார் தங்கவயல் உள்பட மாவட்டம் முழுவதும் தினமும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலார் தங்கவயல்

அறிவிக்கப்படாத மின்தடை

கர்நாடக தலைநகர் பெங்களூருவை ஒட்டி கோலார் மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், கோலாரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

பெங்களூருவுக்கு அருகே இருப்பதால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் வருவதால் கோலார் மாவட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு புறம் தொழில்நிறுவனங்கள் வந்தாலும், மற்றொரு புறம் விவசாயமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோலார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதாவது, கோலார், கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, முல்பாகல், சீனிவாசப்பூர், மாலூர் ஆகிய பகுதிகளில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

தினமும் 8 மணி நேரம் துண்டிப்பு

அதாவது கோலார் தங்கவயல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தினமும் 8 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த அறிவிக்கப்படாத மின்

தடையால் மக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மழை பொய்த்த நிலையில், ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள், அறிவிக்கப்படாத மின்தடையால் சரியான நேரத்திற்கு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் நஷ்டம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் மக்கள் மாநில அரசு மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்துவிட்டு அரசு அடிக்கடி முன்அறிவிப்பு இன்றி

மின்தடை செய்வதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


Next Story