நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது துரதிர்ஷ்டவசம்: மணீஷ் சிசோடியா


நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது துரதிர்ஷ்டவசம்: மணீஷ் சிசோடியா
x

நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது துரதிர்ஷ்டவசம் என கெஜ்ரிவாலுக்கு எழுதிய பதவி விலகல் கடிதத்தில் மணீஷ் சிசோடியா குறிப்பிட்டு உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் சிசோடியாவை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ந்தேதி வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால், சிசோடியா தற்போது சி.பி.ஐ. காவலில் உள்ளார்.

இந்நிலையில், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

எனினும், சி.பி.ஐ. கைது நடவடிக்கைக்கு எதிரான சிசோடியாவின் மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, சட்ட பிரிவு 32-ன் கீழ் மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது என தெரிவித்ததும், சிசோடியாவின் வழக்கறிஞர் சிங்வி மனுவை வாபஸ் பெற்று கொண்டார்.

டெல்லியில் சம்பவம் நடந்திருக்கும்போது, சிசோடியா நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு வர முடியாது என்றும், அவருக்கான தீர்வுகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் டெல்லி ஐகோர்ட்டிலேயே உள்ளன என்றும் அமர்வு தெரிவித்து உள்ளது. அதனால், மாற்று தீர்வை காணும்படியும் கேட்டு கொண்டது.

டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா கைதுக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ஆம் ஆத்மி முடிவு செய்து உள்ளது. இந்நிலையில், மந்திரி பதவியில் இருந்து சிசோடியா விலகியுள்ளார்.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு முன்னாள் மந்திரி மணீஷ் சிசோடியா எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில், உலகில் எந்த சக்தியும் நேர்மையற்ற முறையில் என்னை பணியாற்றும்படி செய்து விட முடியாது. நேர்மையாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய பின்னர் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசம் என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story