42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கு - 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு

42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
42 ஆண்டுகள் பழைமையான கொலை வழக்கு - 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு
Published on

ஃபிரோசாபாத்,

உத்தரப் பிரதேசத்தில் 42 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 பேரைக் கொன்ற வழக்கில் 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆக்ரா பிரிவின் ஃபிரோசாபாத் மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ55,000 அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை கட்டத் தவறினால், ஆயுள் தண்டனையுடன் 13 மாதங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 1981-ம் ஆண்டு டிசம்பரில் ஷிகோஹாபாத் காவல் நிலையப் பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த போது ஷிகோஹாபாத் மெயின்புரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், மெயின்புரி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் அக்டோபர் 1989-ல் ஃபிரோசாபாத் மாவட்டம் உருவான பிறகு, ஷிகோஹாபாத் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் பகுதியாக மாறியது. இருப்பினும், இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி கோர்ட்டில் தொடர்ந்தது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த வழக்கு ஃபிரோசாபாத் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஆனால், அதற்குள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் இறந்துவிட்டனர்.

இந்த நிலையில் எஞ்சியிருக்கும் ஒரே குற்றவாளியான கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com