உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு: 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு


உத்தரபிரதேசத்தில்  இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்க ஏற்பாடு:  400க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
x

உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை நாளை மறுநாள் வெடிவைத்து தகர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நொய்டா,

டெல்லியை தலைமையிடமாக கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 மாடிகளை கொண்ட 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை கட்டியது. இதில் 633 குடியிருப்புகளுக்கு அந்த நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.

இந்நிலையில், வீட்டுக்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்துக்கும், கட்டிடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் நலச்சங்கம், அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் இடிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த கட்டிடம் நாளை மறுநாள் 3 ஆயிரத்து 700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி 9 நொடிகளில் தகர்க்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு முன்ெனச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் மதியம் 2.30 மணிக்கு கட்டிடம் தகர்க்கப்பட உள்ள நிலையில் நொய்டா விரைவுச்சாலை பகுதியில் 2.15 மணி முதல் 2.45 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணியில் நொய்டா நிர்வாகம் தயாராகி வருகிறது. பாதுகாப்பிற்காக 400க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story