200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை - பிரதமர் மோடி வாழ்த்து


200 கோடியை தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை - பிரதமர் மோடி வாழ்த்து
x

இந்தியாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 56 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவை தடுக்க மற்றும் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மத்திய அரசு இலவச அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரதுறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்தார்.

இந்தியாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மீண்டும் இந்தியா வரலாறு படைத்துள்ளது! 200 கோடி தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்தி உள்ளது.

இந்திய மக்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story