அனைத்து இந்திய மொழிகளிலும் பாரதியின் வாழ்க்கை வரலாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் - துணைவேந்தர் குர்மீத் சிங்


அனைத்து இந்திய மொழிகளிலும் பாரதியின் வாழ்க்கை வரலாறு மொழிபெயர்க்கப்பட வேண்டும் - துணைவேந்தர் குர்மீத் சிங்
x
தினத்தந்தி 13 Sep 2022 4:58 PM GMT (Updated: 13 Sep 2022 4:58 PM GMT)

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வ.ரா. எழுதிய மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

புதுச்சேரி:

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலம் சார்பாக, பாரதியின் நூற்றியோராவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், 1944ஆம் ஆண்டு வ.ரா. எழுதிய மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்ஷன்குமார் மொழிபெயர்ப்பில் 'சுப்பிரமணிய பாரதி : ஏ பயோகிராபி பை வ.ரா.' எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய துணைவேந்தர் குர்மீத் சிங், "இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்களுள் சுப்பிரமணிய பாரதியார் முதன்மையானவர். தொழில்நுட்பம் வளர்ச்சிப் பெறாத அன்றைய காலகட்டத்திலேயே, எழுத்தை ஆயுதமாக்கியவர் மகாகவி பாரதி; தன் பாடல்களால் இளைஞர்களின் குருதியில் புரட்சியின் கீதத்தைப் பாடியவர்; தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமைமிக்கவர்.

அப்படிப்பட்ட பாரதியின் நூல் இன்று ஆங்கிலத்தில் வெளிவருவது ஒரு வரலாற்று நிகழ்வு. இதற்காக இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன்குமாரை மனதாரப் பாராட்டுகிறேன். வ.ரா. எழுதிய பாரதியின் வாழ்க்கை வரலாறு பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்" என்று கூறினார்.


Next Story