மதக்கலவரங்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் ரத்து; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


மதக்கலவரங்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் ரத்து; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற மதக் கலவரங்கள் தொடர்பாக பதிவான ஆயிரக் கணக்கான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்- மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற மதக்கலவரங்கள் தொடர்பாக பதிவான ஆயிரக்கணக்கான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவக்குமார் நகர்வலம்

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நகர்வலம் சென்றார். ஜெயமஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார். மேலும் தாமதமாக நடைபெற்று வந்த பணிகளை பார்வையிட்ட துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், அவற்றை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் பணிகளில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை அவர் கண்டிக்கவும் செய்தார். முன்னதாக சதாசிவநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆயிரக்கணக்கான வழக்குகள்...

உப்பள்ளி கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்வதற்கு சிபாரிசு செய்தற்காக பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் ஏராளமான மதக்கலவரங்கள் நடைபெற்றிருந்தது. இந்த மதக்கலவரங்கள் தொடர்பாக பதிவான ஆயிரக்கணக்கான வழக்குகள் பா.ஜனதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது தங்களது கட்சி தொண்டர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

முதலில் எதிர்க்கட்சி தலைவரை பா.ஜனதாவினர் நியமித்துவிட்டு, அதன்பிறகு பேசட்டும். பா.ஜனதாவினர் தங்களது ஆட்சியில் என்னென்ன செய்தார்கள்? என்பது மாநில மக்களுக்கு தெரியும். அதனால் அவர்களை மக்கள் எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரை கூட நியமிக்க முடியாதவர்கள், எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.

ரவுடிகள் விடுவிப்பு

பா.ஜனதா ஆட்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை 7,361 பேரை ரவுடி பட்டியலில் இருந்து விடுவித்திருந்தனர். என் மீது கூட ஏராளமான வழக்குகள் உள்ளன. இதுபோன்ற நிறைய வழக்குகள் கடந்த பா.ஜனதா ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் ஆட்சியிலேயே நடத்தப்பட்டு இருந்தது. தற்போதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியிலும் தேசிய அளவில் சில நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story