சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடக்கம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடக்கம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடங்கியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் பாட்னா சென்றுள்ளனர்.

இந்நிலையில் சமூக நீதியின் மண்ணிலிருந்து போர் முழக்கம் தொடங்கியதில் ஆச்சரியமில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நான் பாட்னா வந்தடைந்தேன், மாண்புமிகு பீகார் முதல்-மந்திர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றேன். 'ஆசியாவின் ஒளி' புத்தர், 'ஜன்நாயக்' கர்பூரி தாக்கூர் மற்றும் திரு பி.பி. மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளர்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், "மூத்த தலைவர் லாலுபிரசாத்யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளை வாழ்த்தினேன். நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறது." என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Next Story