மேற்கு வங்காளம்: தேர்தல் வன்முறைக்கு 20 பேர் பலி; சாக்கடையில் வீசப்பட்ட வாக்கு இயந்திரங்கள்


மேற்கு வங்காளம்:  தேர்தல் வன்முறைக்கு 20 பேர் பலி; சாக்கடையில் வீசப்பட்ட வாக்கு இயந்திரங்கள்
x
தினத்தந்தி 10 July 2023 4:44 AM GMT (Updated: 10 July 2023 4:45 AM GMT)

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். வாக்கு இயந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டு உள்ளன.

முர்ஷிதாபாத்,

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது. இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு நடந்த வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். முர்ஷிதாபாத் நகரில் சில பகுதிகளில் வன்முறை பரவியதில் பலர் தாக்கப்பட்டனர். சிலர் காயமடைந்தும் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக 3 வாக்கு இயந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்டு உள்ளன.

அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதன்பின் உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, தேர்தலுக்கு பின்னர் நிலைமை நன்றாக இல்லை. அச்சத்தினால், பொதுமக்களும் வெளியே வராமல் உள்ளனர். யாரேனும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் என்றால், அவர்களை திரிணாமுல் காங்கிரசார் மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.

தேர்தல் வன்முறையின்போது, பல இடங்களில் வாக்கு பெட்டிகள் சூறையாடப்பட்டு உள்ளன. பல கிராமங்களில் எதிரெதிர் கட்சியினர் மீது வெடிகுண்டுகளும் வீசப்பட்டு உள்ளன.

பா.ஜ.க. சார்பில், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. டயர்கள் எரிக்கப்பட்டன. ஊர்வலம் நடத்தப்பட்டது. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் தொடர்புடைய வன்முறையால், அரசியல் கட்சிகள் இடையே வாக்குவாதங்கள் அதிகரித்து உள்ளன. ஒவ்வொரு கட்சியும் ஒன்றை ஒன்று தாக்கி பேசி வருகின்றன. வன்முறை சம்பவங்களுக்கு மற்ற கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த நிலையில், மத்திய படைகளின் பலத்த பாதுகாப்புடன், 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமுடன் வாக்களிக்க வருகை தந்து உள்ளனர்.


Next Story