மே.வங்கம்; ஹவுரா செல்ல முயன்ற பாஜக தலைவர் கைது


மே.வங்கம்; ஹவுரா செல்ல முயன்ற பாஜக தலைவர் கைது
x

Photo Credit: PTI

கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா,

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் 57 இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புக்கு வழி வகுத்தது.

சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது. இதற்கிடையே, நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது.

இதுதொடர்பாக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவிடுகையில், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட ஹவுரா பகுதிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜூம்தாரை மாநில போலீசார் கைது செய்தனர். பாஜக தலைவர் ஹவுரா சென்றால் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை தடுப்புக்காவலில் கைது செய்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story