ஆசிரியர் பணி நியமன ஊழலில் கைதான மேற்கு வங்காள மந்திரி மருத்துவமனையில் அனுமதி

Image Courtesy : PTI
எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து மந்திரியின் உடல்நிலையை பரிசோதனை செய்ய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த இரு தினங்களாக அமலாக்கத்துறை சுமார் 13 இடங்களில் சோதனை நடத்தி, முன்னாள் கல்வித்துறை மந்திரியும், தற்போதைய தொழில்துறை மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது.
இந்த நிலையில் பார்த்தா சாட்டர்ஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து பரிசோதனை செய்யலாம் என தெரிவித்தது.
இதனிடையே பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஒரு நாள் விசாரணைக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.