மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம்.!


மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இடைநீக்கம்.!
x

சுவேந்து அதிகாரியை இடைநீக்கம் செய்த சபாநாயகர் பீமன் பானர்ஜி, குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க தடைவிதித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரில் அரசியலமைப்பு நாள் குறித்து விவாதம் நடந்தது. "நாட்டின் அரசியலமைப்பு எவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானது" என்பதை பற்றி விவாதிக்க 169 விதியின் கீழ் ஒரு தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கர் கோஷ், பா.ஜனதாவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யாமல் எப்படி தங்கள் பதவியை தக்கவைத்து கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். சங்கர் கோஷின் இந்த பேச்சை சட்டசபை பதிவுகளில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் பீமன் பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜனதா உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபாஸ் ரே, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவித்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று சுவேந்து அதிகாரியை இடைநீக்கம் செய்த சபாநாயகர் பீமன் பானர்ஜி, குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க தடைவிதித்தார்.


Next Story