மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரம்... 'எனக்கு கவலை இல்லை' - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில்


மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு விவகாரம்... எனக்கு கவலை இல்லை - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில்
x

எங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற தெரியும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க திரிணாமூல் காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் கூட்டணியில் சலசலப்பு நீடிக்கிறது.

அண்மையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்-மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும் என நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.

அதோடு, 'இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிடவும் கட்சி தயங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கடந்த 2019 தேர்தலில், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரம்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் பேச்சு குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "நான் முக்கியத்துவம் இல்லாதவன் என்று நினைப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் இங்கு நான் வந்துள்ளேன். எங்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற தெரியும்" என்று கூறினார்.


Next Story