சிக்கமகளூருவில கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை முன்னாள் மந்திரியின் மகன் மீது போலீசில் மனைவி புகார்


சிக்கமகளூருவில கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை முன்னாள் மந்திரியின் மகன் மீது போலீசில் மனைவி புகார்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:46 PM GMT)

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக முன்னாள் மந்திரி சகீர் அகமதுவின் மகன் மீது போலீசில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

முன்னாள் மந்திரியின் மகன்

சிக்கமகளூரு(மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் சிம்ஷியா. இவருக்கும், முன்னாள் மந்திரியும், 3 முறை எம்.எல்.ஏ.வுமாக இருந்தவருமான சகீர் அகமதுவின் மகன் அதிவுர் ரகுமானுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சிம்ஷியா குடும்பத்தார் ரூ.1 கோடி ரொக்கம், ஒரு கார், ஒரு கிலோ தங்க நகைகள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.

கடந்த 7 வருடங்களாக இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அதிவுர் ரகுமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அவர் போதைக்கு அடிமையாகி விட்டதாக அவரது மனைவி சிம்ஷியா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

வழக்கு

மேலும் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு சிம்ஷியாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிம்ஷியா சிக்கமகளூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் இதுபற்றி சிக்கமகளூரு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அதிவுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முன்னாள் மந்திரியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story