பெண் அடித்து கொலை; கணவர் கைது; 6 வயது மகன் காப்பகத்தில் சேர்ப்பு


பெண் அடித்து கொலை; கணவர் கைது; 6 வயது மகன் காப்பகத்தில் சேர்ப்பு
x

பெல்தங்கடி அருகே பெண்ணை அடித்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது 6 வயது மகன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.

மங்களூரு;


காதல் திருமணம்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா கொக்கடா கிராம பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவர், சுள்ளியா தாலுகா கொல்லுமாக்கு பகுதியை சேர்ந்த மோகினி (வயது 36) என்பவரை காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். கணேஷ், அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் கணேசுக்கும், மோகினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதியும் கணேஷ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அடித்து கொலை

அப்போது ஆத்திரமடைந்த கணேஷ், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மோகினியை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மோகினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், தர்மஸ்தலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட மோகினியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோகினியை அவரது கணவர் கணேஷ் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

தொழிலாளி கைது

இதையடுத்து தர்மஸ்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோகினி கொலை செய்யப்பட்ட நிலையில் கணேஷ் சிறைக்கு சென்றதால், அவர்களது 6 வயது மகன் அனாதையாகி உள்ளான். அவனை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் போலீசார், சிறுவனை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.


Next Story