குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது


குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2022 7:00 PM GMT (Updated: 21 Sep 2022 7:01 PM GMT)

சிவமொக்காவில் குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா;

குடும்ப தகராறு

சிவமொக்கா தாலுகா தும்மள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரா (வயது 32). இவருக்கும், சிவமொக்கா தாலுகா புள்ளாபுரா கிராமத்தை சேர்ந்த அமிதா (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த ஆண்டு கணவரிடம் கோபித்து கொண்டு அமிதா, தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மாமியார் வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அமிதாவை கருணாகரா அழைத்துள்ளார். முதலில் வர மறுத்த அமிதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பெண் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கருணாகரா, அமிதாவை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அமிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் அமிதாவை கருணாகரா அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகராவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story