4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு


4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு
x

சொரப் அருகே, வரதட்சணை கொடுமையால் 4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சிவமொக்கா;

வரதட்சணை கொடுமை

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா கப்பகளலே கிராமத்தை சோ்ந்தவர் நயனா(வயது 27). இவர், சரத் என்பவரை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் குரு என்ற மகன் இருந்தான்.

இந்த நிலையில் நயனாவிடம் சரத் மற்றும் அவரது தாய் சீத்தம்மா சோ்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் நயனா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனால் நயனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் தான் இல்லாவிட்டால் மகனை கவனிப்பது யார் என எண்ணிய நயனா, மகனை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

மகனை கொன்று...

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நயனா, மனதை கல்லாக்கி கொண்டு முதலில் மகன் குருவின் கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கிட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர், நயனா மற்றும் அவரது மகன் குரு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள், சொரப் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தாய்-மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதற்கிடையே நயனாவின் தந்தை நாகராஜ் சொரப் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் மகள் நயனாவிக்கு அவளது கணவர் சரத் மற்றும் மாமியார் வரதட்சணை கொடுமைபடுத்தி வந்தனர்.

இதனால் மனமுடைந்து எனது மகள், பேரனை கொன்று தானும் தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடு்க்கும்படி கூறினார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story