வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:46 PM GMT)

சிவமொக்காவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுெதாடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:


சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பாவை சேர்ந்தவர் ஹரீஷ். இவருக்கும் உடுகணி கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் கடந்த ஆண்டு (2021) மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சங்கீதாவின் பெற்றோர் ஹரீசுக்கு 40 கிராம் தங்க நகைகள், ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணம் முடிந்து சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்க்கையில் வரதட்சணை அரக்கனால் புயல் வீச தொடங்கியது. அதாவது, ஹரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சங்கீதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சங்கீதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிராளகொப்பா போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சங்கீதாவின் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தங்கள் மகளை ஹரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். அதன்பேரில் போலீசார் ஹரீசை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story