ரெயில் நிலையத்தில் பெண் கூட்டு பலாத்காரம்; 4 ரெயில்வே ஊழியர்கள் கைது


ரெயில் நிலையத்தில் பெண் கூட்டு பலாத்காரம்; 4 ரெயில்வே ஊழியர்கள் கைது
x

பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி

புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் நான்கு பேரால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ரெயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ரெயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற இருவரும் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நட்ந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 35 வயதாகும் சதீஷ் குமாருக்கு, அப்பெண்ணை சில ஆண்டுகளாகத் தெரியும். சதீஷ்குமார் தான் ரெயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறி அறிமுகம் செய்துள்ளார். இந்திய ரெயில்வேயில் அப்பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

கணவரிடமிருந்து பிரிந்து விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அப்பெண் சதீஷ்குமாருடன் மொபைலில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு விருந்து கொடுப்பதாக டெல்லிக்கு வரவழைத்து புதுடெல்லி ரெயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கான குடிசையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story