கொள்ளையன் தாக்கியதில் விமானப்படை பெண் அதிகாரி உயிரிழப்பு


கொள்ளையன் தாக்கியதில் விமானப்படை பெண் அதிகாரி உயிரிழப்பு
x

பஞ்சாப்பில் கொள்ளையன் தாக்கியதில் விமானப்படை பெண் அதிகாரி உயிரிழந்தார்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில் விமானப்படை தளம் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணி புரிந்த பெண் அதிகாரி ஒருவர், அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த குடியிருப்பில் தனியாக தங்கி இருந்தார். இவர் கடந்த 14-ந்தேதி இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது வீட்டில் திருடன் நுழைந்திருப்பது தெரிந்தது. அவர் சுதாரிப்பதற்குள் கொள்ளையன் கத்தியால் அவரை பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பிவிட்டான்.

பின்னர் அவர் உதவி கேட்டு கூச்சல்போட்டபோது, பக்கத்து குடியிருப்பில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, அங்குள்ள உணவகத்தில் ஊழியராக வேலை பார்த்த மக்கான் சிங் என்பவர்தான், பெண் அதிகாரி தனியாக இருப்பதை அறிந்து திருடும் நோக்கத்தில் குடியிருப்புக்குள் நுழைந்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் அதிகாரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story