பெண் பத்திரிகையாளரை அவமதித்த வழக்கு: நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்


பெண் பத்திரிகையாளரை அவமதித்த வழக்கு: நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன்
x

நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கொச்சி,

கேரளாவில் பிரபல நடிகரும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான சுரேஷ் கோபி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பெண் பத்திரிகையாளர் தோளில் கையை வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து தன்னை அவமதித்ததாகவும், தவறான நோக்கத்துடன் தன் மீது கை வைத்ததாகவும் பெண் பத்திரிகையாளர் தெரிவித்தார்.

இதையடுத்து தனது மகள் வயதுடைய பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும், அவரிடம் மன்னிப்பு கோருவதாகவும் சுரேஷ் கோபி கூறினார். இருப்பினும், பெண் பத்திரிகையாளர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நடிகர் சுரேஷ் கோபி விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் அவர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சுரேஷ் கோபியின் மகள் திருமணம் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் அவர் முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த தனி அமர்வு நீதிபதி சுரேஷ்குமார், இதுகுறித்து மாநில அரசு தனது கருத்தினை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

பின்னர் இந்த வழக்கில் சுரேஷ் கோபியை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபிக்கு முன் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story