பெண் கழுத்தை நெரித்து கொலை


பெண் கழுத்தை நெரித்து கொலை
x

கதக் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை கணவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு:-

கதக் (மாவட்டம்) புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்பலா கிராமத்தை சேர்ந்தவர் சதாம். இவரது மனைவி சனா (வயது 26). இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல், நேற்று முன்தினம் மாலையிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த சதாம் தனது மனைவி சனாவின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். உடனே அங்கிருந்து சதாம் ஓடிவிட்டார். இரவில் சனாவை பார்க்க குடும்பத்தினர் வந்த போது, அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

தகவல் அறிந்ததும் கதக் புறநகர் போலீசார் விரைந்து வந்து சனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவரது கழுத்தில் நகங்களின் தடம் பதிந்திருந்தது. இதனால் சனாவின் கழுத்தை நெரித்து சதாம் கொலை செய்தது தெரியவந்தது. சனாவிடம் வரதட்சணை கேட்டு சதாம் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் சதாம் வேறு ஒரு பெண்ணுடனும் பழகி வந்துள்ளார். இதுபற்றி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. பின்னர் 2 குடும்பத்தினரும் அவர்களை சமாதானப்படுத்தி இருந்தனர். பின்னர் அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்துவதாக சதாம் கூறி இருந்தார். இதே விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சதாமை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story